தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் குடியரசு யாப்பினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நாள் தமிழ் மக்களின் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டது. தொடர்ந்தும் அது கரிநாளாகவே அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
1978ஆம் ஆண்டு மற்றொரு புதிய அரசியல் யாப்பினை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தினார். அதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இலங்கையின் சுதந்திர தினம் என்பது இலங்கை தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கருப்பு தினமாகவே இருந்து வந்துள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி எழுபத்து மூன்றாவது சுதந்திர தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக இலட்சக் கணக்கில் தமது சொந்தபந்தங்களை இழந்தும் போராடி வருகின்றனர்.
இன்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கமோ தமிழ் மக்களின் புராதனச் சின்னங்களை அழிப்பதிலும் அத்தகைய புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதிலும் காணிகளை பலாத்காரமாக அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதிலும் வடக்கு-கிழக்கு இணைப்பை இல்லாதொழித்து அந்த நிலத் தொடர்ச்சியை இல்லாமல் செய்வதிலும் வேகமாகச் செயற்பட்டு வருகின்றது.