இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இதுவரை 97 பேரை கைது செய்துள்ளதாகவும், தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் ராஜஸ்தானின் ஜோத்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று முன்தினம் இரவு அதாவது, ரம்ஜான் கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 5 போலீசார் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.எனினும், நேற்றைய தினம் ரம்ஜான் என்பதால், இந்த பதற்றம் ஓரளவு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், காலையிலேயே தொழுகைக்கு பிறகும் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதால் மறுபடியும் அங்கு பதற்றம் ஏற்பட்டது. காரணம், ஜோத்பூரின் ஜலோரி கேட் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பால்முகுந்த் பிஸ்ஸாவின் சிலை உள்ளது... இந்த சிலைக்கு பக்கத்திலேயே ரம்ஜானை முன்னிட்டு சிறுபான்மை சமூகத்தினர் நேற்று முன்தினம் இரவு தங்கள் மதக் கொடியை கட்டியுள்ளனர்.
அப்போது, பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த காவிக் கொடி அகற்றப்பட்டதாக சிலர் ஆட்சேபம் தெரிவித்ததில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது... இதுதான் இரு சமூகத்தினர் இடையிலான மோதலாக வெடித்தது..கொடிகள், பேனர்களை கிழித்த கும்பல், ஒலிபெருக்கிகளையும் அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர்..