தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் நோக்கத்தில் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்துக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் ஊக்க ஊதியத்துடன் பல்வேறு பயிற்சிகளை வழங்கப்படும்.
திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள், https://www.bim.edu/tncmpf எனும் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.5.66 கோடி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.