More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜெனிவாவில் அம்பலமாகிய அமெரிக்க - இந்திய கூட்டு! ஆணையாளரின் அறிக்கை யாருக்கு சாதகம்
ஜெனிவாவில் அம்பலமாகிய அமெரிக்க - இந்திய கூட்டு! ஆணையாளரின் அறிக்கை யாருக்கு சாதகம்
Mar 07
ஜெனிவாவில் அம்பலமாகிய அமெரிக்க - இந்திய கூட்டு! ஆணையாளரின் அறிக்கை யாருக்கு சாதகம்

ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இரண்டு முக்கியமான கருத்துக்கள் வெளிவந்துள்ளன.



ஒன்று இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கு ஆணையாளர் மிச்செல் பச்லெட் எதிர்பார்ப்புடன் கூடிய பாராட்டை வெளியிட்டுள்ளமை.



அதாவது புதிய யாப்புக்கான நகல் வரைபு வெளிவர முன்னரே ஆணையாளர் பாராட்டியிருக்கிறார். இரண்டாவது, தமிழ் மக்களிற்குப் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டுமென ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கூறியமை.



ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்திராமணி பாண்டே அவ்வாறு கூறியிருக்கிறார் என்று கூறினாலும், 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தக் காலத்தில் இருந்தே இந்தியாவின் நிலைப்பாடு 13 பற்றியதாகவே இருந்தது.



ஆகவே தமிழ் மக்களிற்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அர்த்தமுள்ள அதிகார பகிர்வை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும், மாகாண சபைகளுக்குரிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் இந்தியா வலியுறுத்தியமைக்குக் காரணம், தமது நீண்டகாலக் கோரிக்கை தோல்வியடையக்கூடாது என்ற மன நிலையே.



மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட், இலங்கை தொடர்பான தமது எழுத்து மூல அறிக்கையை கடந்த சனிக்கிழமை மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத் தொடரில் முன்வைத்தார். அந்த எழுத்துமூல அறிவிப்புக்குப் பதிலளித்தபோதே இந்தியப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே 13 ஆவது திருத்தத்தின் ஊடான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு பற்றிக் கூறியிருக்கிறார்.



சர்வதேச சமூகத்துடன் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவினுடைய ஒத்துழைப்பையே இந்தியப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே சுட்டிக்காட்டுகிறார் என்பது வெளிப்படையாகின்றது.



அத்துடன், தமிழ் சமூகத்தின் சட்டரீதியான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்திராமணி பாண்டே வலியுறுத்தியமை, இலங்கை அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு அமைவான 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் போதுமானது என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டையே சுட்டி நிற்கின்றது.



ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல பச்செட்டின் அறிக்கை, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் போன்றவற்றை மாத்திரமே கூடுதல் கரிசனைகளாக வலியுறுத்தியுள்ளன. அரசியல் தீர்வுக்காக ராஜபக்ச அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் புதிய யாப்பு பற்றியும் ஆணையாளர் பாராட்டி ஆரூடம் சொல்லியிருக்கிறார்.



மாறாக வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் மற்றும் புத்த விகாரை கட்டுதல் போன்ற தமிழர்களின் மரபுரிமைகள் அழிக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிரான பகிரங்கக் கண்டனங்கள் எதனையும் வெளியிடவில்லை.



படுகொலைகள் மாத்திரமல்ல மரபுவழித் தாயகத்தைக் கூறுபோடும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளும் தமிழ்ப் பண்பாட்டு உரிமைகளுக்கு மாறான சிங்கள மரபுரிமைத் திணிப்புகளும் இன அழிப்பே என்ற வரைவிலக்கணம் அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை. பொறுக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கம் வலிகியுள்ளது என்ற கவலையை மாத்திரம் முன்வைத்திருக்கிறார் மிச்சல் பச்லெட்.



அத்துடன் இலங்கையின் பொதுவான மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயகப் பிரச்சினைகள் பற்றியும் அறிக்கையில் கூடுதலாகப் பிரஸ்தாபித்திருக்கிறார். ஆண்டுதோறும் ஆணையாளரினால் வெளியிடப்படும் வாய்மூல, எழுத்துமூல அறிக்கைகளிலும் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்பட்டுச் சிங்கள மரபுரிமைகள் திணிக்கப்படுகின்ற செயற்பாடுகள் சுட்டிக் காண்பிக்கப்படுவதில்லை.



அது பற்றிக் குறைந்த பட்சம் கவலைகூட ஆணையாளரினால் வெளிப்படுத்தப்படுவதுமில்லை. ஆகவே அமெரிக்கா கூறுகின்ற போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை குறித்த பொறிமுறை பற்றியேனும், நியாயமான கருத்தாடலை உருவாக்கும் திட்டங்களை இம்முறை அறிக்கையில் முன்மொழிந்திருக்கலாம்.



உறுதியான ஆதாரங்கள் ஜெனிவாவில் உண்டு. இந்தியப் பிரதிநிதி இந்திராமணி பாண்டேயின் பதில் விளக்கவுரையிலும் வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழர்களின் மரபுகள் அழிக்கப்படுகின்றமை தொடர்பாக எதுவுமே கூறப்படவில்லை.



மாறாக இலங்கை தமது நண்பன் மற்றும் அயல் நாடு என்ற அடிப்படையில், தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ள தமது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தும் என்று மாத்திரமே அவர் சொல்லியிருக்கிறார். 2012 ஆம் ஆண்டில் இருந்து ஜெனிவாவில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு பகிரங்கமாகவே வெளிப்படுத்தப்பட்டிருந்தது.



ஆகவே இந்தோ - பசுபிக் பிராந்தியப் புவிசார் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நோக்கில் மாத்திரம் தேவைப்படும் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப அமைந்துள்ள ஆணையாளரின் அறிக்கையை நியாயப்படுத்தும் வகையிலேயே இந்தியப் பிரதிநிதியின் இந்தப் பதிலுரையும் இறுக்கமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.



கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது. அது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாது நடுநிலை வகித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கைக்குப் பதில் வழங்கும்போது 13 பற்றி இந்தியப் பிரதிநிதி விரிவான பதிலை வழங்கி இந்தியாவின் நீண்டகால விருப்பங்களையும் நிலைப்பாடுகளையும் செப்பியிருக்கிறார்.



கடந்த தீர்மானத்திலும் 13 பிரதான விடயமாகக் கூறப்பட்டிருந்தது. அது மாத்திரமல்ல 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முறையாக அமெரிக்கா சமர்ப்பித்து நிறைவேற்றிய தீர்மானத்திலும் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி எனக் கூறப்பட்ட மைத்திர - ரணில் அரசாங்கத்திலும் 13 பிரதானமாகக் கூறப்பட்டிருந்தது.



இந்தவொரு நிலையில். கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளும் 13 பற்றி ஜெனிவாவில் போசிக் கொண்டு வந்தாலும், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தயங்கிவிடுமோ என்றொரு அச்சமான நிலையிலேயே இம்முறை அழுத்தம் திருத்தமாகப் 13 பற்றி இந்தியப் பிரதிநிதி பேசியிருக்கிறார் போலும். அதுவும் 13 ஐ நடைமுறைப்படுத்தச் சர்வதேச ஆதரவு தேவை என்ற தொனி இந்தியப் பிரதிநிதியின் பேச்சில் இருந்து வெளிப்பட்டுள்ளது.



ஆகவே இந்தியப் பிரதிநிதியின் பேச்சில் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடைய எதுவுமேயில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமர்விற்கு அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அதுவும் இன அழிப்புக்கான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியே அந்தக் கடிதம் அமைந்திருந்தது. ஆனால் இம்முறை ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக அனுப்பியிருக்கின்றன.



13 ஐ வலியுறுத்தி மோடிக்குக் கடிதம் அனுப்பிய ஆறு தமிழ்க் கட்சிகளில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகள் மாத்திரம் இணைந்தே ஜெனிவாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளன. (மோடிக்குக் கடிதம் அனுப்புவதில் ஒற்றுமை. ஆனால் ஜெனிவாவுக்குக் கடிதம் அனுப்புவதில் வெவ்வேறுபட்ட கருத்து நிலை) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் வேறொரு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்.



அடிப்படையில் தமிழ்த்தேசியமே என்று இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மார்தட்டினாலும் ஒவ்வொரு கட்சிகளினது கடிதங்களும் வெவ்வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்ற செய்தியே உலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான கூட்டுக் கோரிக்கையாக அந்தக் கடிதங்கள் அமைய வாய்ப்பில்லை.



மாறாக அரசியல் விடுதலைக்கான கூட்டுரிமைக் கோரிக்கைக்குரிய வலுவை, தமிழ்த்தேசியக் கட்சிகள் அனுப்பிய தனித்தனிக் கடிதங்கள் சிதறடித்திருக்கின்றன. குறிப்பாக இன அழிப்பு விசாரணை என்பதும் அதற்கான சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய, சர்வதேச விசாரணைக்கான நேரடி அழுத்தங்களையும் எந்வொரு தமிழ்த்தேசியக் கட்சிகளும் தத்தமது கடிதங்களில் முதன்மைப்படுத்தவில்லை.



வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்புத்தான் நிரந்த அரசியல் தீர்வு என்று எந்தவொரு கடிதத்திலும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்படவேயில்லை. அப்படி முதன்மைப்படுத்தியதாகக் குறிப்பிட்டுச் சில தமிழ்த்தேசியக் கட்சிகள் தங்களைத் தாங்களே நியாயப்படுத்தி வாதிட்டாலும். அந்தக் கடிதம் அரசியல் விடுதலைக்கான கூட்டுரிமைக் கோரிக்கையாக அர்த்தப்படாதென்பதே யதார்த்தம்.



செல்வம் தலைமையிலான அணி 13 பற்றி நடத்திய கூட்டமும், சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான அணி அமெரிக்காவுக்குச் சென்று பேசியமையும் எதற்காக என்பது பற்றிக் கூர்மைச் செய்தித் தளம் ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. இரண்டு அரசியல் அணிகளாகப் பிரிக்கப்பட்டுக் காய் நகர்த்தப்பட்டிருந்தாலும் அது அமெரிக்க - இந்தியக் கூட்டு நிகழ்ச்சி நிரல் என்பதை நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு பட்டவர்த்தனமாகவே அம்பலப்படுத்தியுள்ளது.



ஆகவே இலங்கை விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் கூடிய பங்களிப்பு என்று இந்தியப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே, விடுத்த அழைப்போடும், வர்ணிப்போடும், எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைச சபை அமர்வின்போது இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடக் கூடிய வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன.



அதற்கு முன்னோடியாகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி சட்டத்தரணி சுமந்திரன் தமிழ் மக்களிடம் மாத்திரமல்ல, கொழும்பை மையமாக் கொண்டியங்கும் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிங்கள் பொது அமைப்புகள் அனைத்திடமும் கையொப்பம் பெறும் போராட்டத்தை நடத்தி வருகின்றார்.



ஆகவே அது குறித்துச் சுமந்திரன் மாத்திரமல்ல, ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட ஜெனீவா மனித உரிமைச் சபையிடம் முறையிட்டதாகத் தெரியவில்லை. அதாவது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையின் அந்தஸ்த்தில் இருந்து கீழிறங்கி, இலங்கை மக்களின் ஒட்டுமொத்த மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான போராட்டம் என்ற தொனியில் மாற்றியமைக்க முற்படுகின்றார் சுமந்திரன்.



இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்ற முறைமையே உண்மையில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஆபத்தானது. இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்பது சிங்கள மக்களை நோக்கியதாக இல்லை.



ஆகவே அது குறித்துச் சுமந்திரன் மாத்திரமல்ல, ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட ஜெனிவா மனித உரிமைச் சபையிடம் முறையிட்டதாகத் தெரியவில்லை. ஆறாம் திருத்தச் சட்டம் நீக்க வேண்டுமெனவும் கோரப்படவில்லை. இதன் பின்னணியிலேயே இலங்கையின் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு ஜெனிவாவின் குறைந்த பட்ச அழுத்தங்களில் இருந்தும் இலங்கை காப்பாற்றப்படும் நிலைமை பகிரங்கமாகவே தெரிகின்றது.



அதற்கு முன்னோடியாகவே கூட்டு ஒற்றுமை என்ற பெயரில் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளின் தயார்படுத்தலோடும், இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்தோடும் அமெரிக்க - இந்திய அரசுகளினால் நடத்தப்பட்ட அரசியல் பரிசோதனைதான் இந்தப் 13. அதனையே செல்வம் அணி பொறுப்பேற்றிருந்தது.



புதிய அரசியல் யாப்பு என்ற கோசத்துடன் 13 இற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தாலும், அதனை இலங்கைச் சிங்கள அரச உயர்பீ்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தாது என்பதைத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் நன்கு அறியும். இந்த இடத்திலேதான் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்குரிய கூட்டுக் கோரிக்கைக்குத் தமிழர்கள் தயாராக வேண்டும். அதற்கான ஏற்பாடு என்பது தமிழ்த்தேசியக் கட்சிகளைத் தாண்டிய பொது அமைப்புகளாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு

Jun22

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக 

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா

Apr22

ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை

Jun17

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம

Mar07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Aug26

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும

May23

குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா

Jan27

 

இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்

Jun13

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி

Jul09

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று

May17

நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக

Sep06

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு

Sep08

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள

Mar06

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 20 (17:45 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 20 (17:45 pm )
Testing centres