‘பட்ஜெட்- 2015’ போரின் பின்னரான பொருளாதாரத்தில் எதை நோக்க
Dec01
‘பட்ஜெட்- 2015’ போரின் பின்னரான பொருளாதாரத்தில் எதை நோக்க
அதிகரித்துச்செல்லும் விலையேற்றத்தின் மத்தியிலும் மக்களின் அன்றாட வாழ்க்;கைச் செலவு சமாளித்துக்கொள்ள முடியாத நிலையிலேயே இன்று நகர்ந்து செல்கின்றது.
பொருளாதார வளர்ச்சி! என்றும் இல்லாதவாறு இன்றைய ஆட்சியில் இருப்பதாக பெரிதாக பிரஸ்தாபிக்கப்பட்டாலும் மக்களின் அன்றாட நடைமுறையில் அதனை உணர்ந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படியென்றால் உண்மையிலேயே நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடைவு மட்டம் அல்லது அதன் வெளித்தோன்றல் எந்த அளவிற்கு இருக்கின்றது. எனும் கேள்விக்கான விடை என்ன?
பொருளாதார வளர்ச்சி நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கான அடையாளம் கட்டடங்களும், பாலங்களும், கொங்கிறீட் வீதிகளும், அதிவேக நெடுஞ்சாலைகளும், மானிய அடிப்படையிலான மோட்டார் சைக்கில்கள் வழங்குவதும்தானா?
இவ்வாறான கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழும் நிலையில்தான் 2015ம் ஆண்டிற்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
2009ம் ஆண்டிற்கு முன்னரான அதாவது நாட்டில் இடம்பெற்று வந்த ஆயுத மோதல் முடிவிற்கு வருவதற்கு முன்னரான காலப்பகுதிக்கும் அதன் பின்னரான காலப்பகுதிக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் பொருளாதாரத் துறையில் இடம்பெற்றிருக்கின்றன.
போர் காலத்தில் நிலவிவந்த விலை யேற்றத்திற்கும் போரின் பின்னரான காலப்பகுதியில் அதாவது தற்போதைய சூழலில் நிவும் விலையேற்றத்திற்குமான காரணங்கள் என்ன?
போரின்; பின்னரான சுமார் ஐந்து வருடங்கில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம்; போர்க்கால செலவீனங்களில் அரைவாசியையாவது இதுவரையில் நிவர்த்தி செய்திருக்கின்றதா, என்றால் அதற்கான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
இன்று போரின் பின்னரான அபிவிருத்தி என்று பெரிதாக பேசப்பட்டாலும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் சொந்த நாட்டின் வருமாணத்தை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது என்று மட்டும் சொல்ல முடியாது.
மாறாக வெளிநாட்டுக் கடன்களிலேயே இன்றும் நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியும் தங்கியிருக்கவேண்டிய நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்ட ஐ.நாவின் உப பிரிவுகளிடமும் அதன் ஸ்தாபனங்களிடமும் இருந்தே இன்றும் அரசாங்கம் கையேந்திக் கொண்டேதான் இருக்கின்றது.
இவ்வாறானதொரு நிலையில் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவினால் இம்மாதம் 24ம் திகதி பாராளுமன்றில் ‘பட்ஜெட்’ வாசித்தளிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் பட்ஜெட் வரலாற்றில் எடுத்தவுடனேயே வாசிக்கப்படுவது அரச ஊழியர்க்கான சம்பள உயர்வு, வாழ்க்கை படி கொடுப்பனவு உள்ளடங்களான இதர சலுகைகளே.
ஆயினும் 2015ம் ஆண்டிற்கான பட்ஜெட் சமர்ப்பிப்பில் அதிகளவிலான சலுகைகளும், நிவாரணங்களுக்கும் வழி சமைத்திருப்பதாக தோன்றினாலும் அதுவும் ஒரு தேர்தல் கால காய் நகர்த்தலாகவே இருக்கின்றது.
ஏனெனில் எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது எனும் முனைப்பு பெரும் எடுப்பாக எடுக்கப்படுகின்றது.
தேர்தல் என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத போதும் தேர்தல் கால செயற்பாடுகள் இப்போதே ஆரம்பித்திருக்கின்றதாகவே பார்க்கப்படுகின்றது.
2009ம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டு நிதிகளையும் அபிவிருத்திக்கான மூலங்களையும் நாட்டிற்குள் உள்வாங்கிக்கொண்ட தற்போதைய அரசாங்கம் போரின் பின்னரான காலப்பகுதியில் அரசசார்பற்ற மற்றும் தொண்டு ஸ்தாபணங்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கின்றது.
தமது கழுத்தில் வீழ்ந்திருக்கும் சுருக்குக்கயிறு இறுகுவதற்கு முன் அரசாங்கம் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை செய்வதற்கு சற்றும் தயங்கப்போவதில்லை.
இதனாலேயே அரச சார்பற்ற மற்றும் தொண்டு ஸ்தாபணங்கள் ஊடகங்களை சந்திப்பதையோ அல்லது அவைகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கோ தடைகளை ஏற்படுத்தியிருப்பதோடு வெளிநாட்டு நிதிகளை பெறுவதாயின் அணுமதியினை பெற வேண்டும் எனவும் புதிதாக தெரிவித்திருக்கின்றது.
ஆனால் அரசாங்கம் நாட்டில் தற்போது முன்னெடுத்து வரும் அபிவிருத்தித்திட்டங்களுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்களை அரசு சாரா அமைப்புக்களிடமிருந்தே பெற்றுக்கொள்கின்றது எனபதை அது மறந்து விடுகின்றது.
அதேவேளை ஐ.நாவினை அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசாங்கம் பொருளாதார மற்றும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக அதனுடனான சிநேக பூர்வ உறவையும,; சலுகையினையும் விரும்புகின்ற இரட்டை கொள்கை நிலையில் இருந்து வருகின்றது.
போர்க்காலத்தில் மேற்கொள்ளப்;பட்ட விலைவாசி ஏற்றத்தின் மூலம் அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்களை ஈடு செய்தது அல்லது அதற்கான நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுத்தது என்பதாக சொன்னாலும் போரின் பின்னரான கடந்த ஐந்தாண்டு பகுதியிலும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தேசிய பாதுகாப்பு எனும் விடயதானத்திற்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் படைத்தரப்பிற்காக அல்லது பாதுகாப்பு செலவினங்களை காரணமாக கொண்டு பாரியளவிலான நிதி ஒதுக்கீட்டை செய்ததைப்போலவே யுத்தம் இல்லாத, யுத்தத்திற்கான காரணங்கள் அறவே இல்லாத தற்போதைய சூழ்நிலையிலும் அதற்கு சமமான அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
2013ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை பல நாடுகள் பாராட்டியுள்ளதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது வரவு செலவுத் திட்டங்களும் தேசிய பொருளாதார இலக்கு ஒன்றை நோக்கி நகரும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மிக வலுவான நிலையில் இலங்கையின் பொருளாதாரம் இருப்பதாகவும் தான் இங்கு முதலீடு செய்வது உறுதி எனவும் கிறவுன் நிறுவன தலைவர் ஜேம்ஸ் பெக்கர் தெரிவித்திருக்கின்றார்.
சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமது கருத்தை பெக்கர் வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார்.
30 வருட யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கைக்கான தமது ஐந்தாவது விஜயத்தில் நம்பிக்கையுடன் வளர்ச்சி யடைந்து கொண்டிருக்கும் ஒரு நாடு இலங்கை என்பதை தாம் உணர்ந்து கொண்டதாக தெரிவித்திருக்கும் பெக்கர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றமை மற்றும் தொடர்ச்சியான உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றினைக் கண்டு தாம் கவரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
போருக்கு பின்னர் இலங்கை பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் அவர் இலங்கையின் பொருளாதாரம் இப்போதும் மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதுடன் அதன் முழுமையான வெற்றியை காண்பதற்குரிய சிறப்பான பாதையில் அது பயணித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
பொருளாதார அபிவிருத்தியானது வாழ்க்கையின் மிக முக்கியமான படிக்கற்கள், பொருளாதாரம் வலுவான ரீதியில் வளர்ச்சியடைந்தால் அதன் மூலம் அப்பிரஜைகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் என தெரிவித்திருக்கும் பெக்கர்
ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த அனைத்தையும் சிறப்பாக வழங்கி கொண்டிருக்கின்றது என புகழாரம் சூட்டியிருக்கின்றார்.
அதேவேளை பொருளாதார வளர்ச்சியினை நாட்டின் சகல பாகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு விசேடமான உட்கட்டமைப்பு நிர்மாணத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவுஸ்திரேலியாவின் கிறவுன் நிறுவனத்தின் தலைவரான ஜேம்ஸ் பெக்கர் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் இருந்து போரின் பின்னரான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் அதன் தொடர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆயினும் பெக்கர் போர் காலத்தில் அரசாங்கத்தினால் அல்லது போரில் ஈடுபட்ட அரச தரப்பால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார அழிவுகள் பற்றியோ அல்லது அதனால் மக்களின் பொருளாதா மேம்பாட்டில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள், அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள்பற்றி எதையும் வெளிப்படுத்தியதாக இல்லை.
ஆக, பெக்கர் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமானதொரு நிலைப்பாட்டிலும் அதனையே உச்சாகப்படுத்த வேண்டும் எனும் நிலைப்பாட்டிலுமே இருப்பது போல் தெரிகின்றது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டிருக்கின்றது என்று கருதினால் ஏன் ஆயிரக்கணக்கானோர் தஞ்சக்கோரிக்கை எனும் அடிப்படையில் பெக்கரின் சொந்த நாடான அவுஸ்ரேலியாவிற்கு பயணமாகின்றனர்?
2009ம் ஆண்டுக்கு முனனரான காலப்பகுதியில் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளைத் தவிர்ந்த ஏனையப் பகுதிகளில் வாழ்பவர்கள் மட்டுமே பெரும்பாலும் வெளிநாட்டு பணியாளர்களாக இருந்தனர்.
ஆனால் தற்போது வட கிழக்கு பகுதிகளில் வாழ்பவர்களும் உள்நாட்டில்; வருவாயை ஈட்ட போதுமான தொழில் வாய்ப்பு இல்லை எனும் காரணத்தினாலும், செலவீனங்களுக்கு முகம் கொடுக்க முடியாமையினாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொருளாதாரம் மேம்பட்டிருக்கின்றது என்றால் ஏன் அரசாங்கம் உள்நாட்டில் தொழில் முயற்சிகளை ஊக்குவித்து அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாது.
மாறாக அரசாங்கமும் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிப்புரிவதன் ஊடாக கிட்டும் வருவாயை கவனத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்பையே ஊக்குவித்து பொருளாதாரத்தை ஈட்டிக்கொள் முனைகின்றனது எனலாம்.
போரின் போது ஓரளவு தன்னிறைவு பொருளாதாரத்தை நுகர்ந்த மக்கள் போரின் பின்னரான இன்றைய காலப்பகுதியில் அதித கடன் சுமைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவே தெரிகின்றது.
வங்கிகள், பல்தேசிய கம்பனிகள், நிதி நிறுவனங்கள், குத்தகை கம்பனிகள் உள்ளிட்ட ஸ்;தாபனங்களின் அதிகரித்த போட்டிகளின் காரணமாக மக்கள் இன்று நாளாந்த கடன் காரர்களாக மாறியிருக்கின்றார்கள்.
இவைகள் மக்களை இலகு கடன்கள், மானியங்கள் சுழற்சிக் கடன்கள்; என பல புதிய கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமாக உள்வாங்கி பெருந்தொகையான பணத்தை அவர்களிடமிருந்து அறவிடுவதோடு இறுதியில் தெருத்தெருவாக அலையவிடுகின்றார்கள்.
கம்பனிகளின் மேற்படி வேட்டையில் அதிகம் சிக்குண்டு சின்னாபின்னமாகி வங்கியும், கம்பனியுமாக அலையும் பெண்கள் கூட்டம் இன்று அதிகரித்திருக்கின்றது.
காலையில் எழுந்து வீட்டுக்கடமைகளை செய்கின்றார்களோ இல்லையோ பல்தேசியக் கம்பணிகளின் கதவடிகளிலும், கம்பனிக்காரர்கள் கடனாளிகளின் வீட்டுப்படலையிலும் நிற்கும் நிலையே தற்போது நிலவி வருகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 2015ம் ஆண்டிற்கான பட்ஜெட் போரின் பின்னரான பொருளாதாரத்தில் எதை நோக்கி எப்படி நகரப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy