ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின.
முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்திய இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும் , டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக ஆடி நசும் அகமது 44 ரன்களும் , மகேதி ஹசன் 29ரன்களும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் , முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 266 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பந்துகளில் ரன் ஏதுமின்றி அவுட்டானார். அடுத்து வந்த திலக் வர்மா(5 ரன்கள்), கே.எல்.ராகுல்(19 ரன்கள்), இஷான் கிஷன்(5 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசி அசத்தினார். சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் போல்ட் ஆனார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய அக்சர் பட்டேல் 42 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் 133 பந்துகளில் 121 குவித்து கேட்ச் ஆனார். இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 259 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.