சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி சமைத்து சாப்பிடுவதைவிட கொஞ்சம் வித்யாசமாக சிக்கனில் பட்டர் சிக்கன் செய்து சாப்பிட்டுப்பாருங்கள். இந்த பட்டர் சிக்கன் சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
முதலில் சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்த சிக்கனை போட்டு அதனுடன் தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் தேவயானளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
அதனை பிரிட்ஜில் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைத்துக்கொள்ளவும்.சிக்கன் ஊறியதும், ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்க வேண்டும்.பின் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் முந்திரி விழுதை சேர்த்து கிளறி விட்டு , குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்பு கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விடவும் , தொடர்ந்து சிக்கன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, சிக்கன், 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியாக அதில் கசூரி மெத்தியை கையால் நசுக்கி தூவி, கரம் மசாலாவை சேர்த்து கிளறி இறக்கி, மேலே வெண்ணெய் மற்றும் மில்க் க்ரீம்மை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் சிக்கன் தயார்.