உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது. மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என அதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமலும், உடம்பு மீது அக்கறை இல்லாமலும் இருந்துவிட்டு, உடல் எடை அதிகரித்ததற்குப் பிறகு ஜிம்முக்கும், மருத்துவமனைக்கும் செல்பவர்கள் அதிகம்.
சின்ன சின்ன விஷயங்களில் அக்கறையோடு, சிலக்கட்டுப்பாடுகளோடு இருந்தால் ஜிம்முக்குப் போகாமல், மருத்துவரை நாடாமல் உடல் எடையைக் குறைக்க முடியும் என்கிறார் பொது நல மருத்துவர் டாக்டர் கருணாநிதி, அவர் தரும் 10 ஆலோசனைகள்!
1. சர்க்கரையை தவிர்த்திடுங்கள்
உடல் எடை அதிகரிக்க சர்க்கரை முக்கியக் காரணம். அதனால் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். பால், டீ, காபியுடன் சேர்க்கும் சர்க்கரையைத் தவிர்த்தால் மட்டும் போதாது. ஸ்வீட், சாக்லேட்டுகளையும் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல... டெஸர்ட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை `சுகர்-ஃப்ரீ' டயட்டுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை குறைக்கவும் முடியும்.
2. எலுமிச்சை கலந்த தண்ணீர்:
தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும். இந்தக் கலவையுடன் சிறிது தேன் சேர்த்தும் அருந்தலாம்.
3.சின்னச் சின்ன உடற்பயிற்சிகள்
வீட்டில் சிறு சிறு உடற்பயிற்சிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரலாம். இது உடல் எடை குறைய மிகவும் உதவியாக இருக்கும்.
4. சாப்பாட்டில் கவனம்:
சாப்பிடும்போது, சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டி.வி பார்த்துக் கொண்டோ மொபைலில் பேசிக்கொண்டோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முழு கவனமும் சாப்பாட்டில் இல்லாதபோது வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டு விடுவோம். அதனால், டி.வி,மொபைல் போன்றவற்றிலிருந்து சற்று விலகி இருப்பது நல்லது.
5. லிஃப்டைத் தவிருங்கள்:
இன்றைக்கு பெரும்பாலானோர் ஏ.சி பஸ் அல்லது காரில்தான் பயணம் செய்கிறார்கள். இது வியர்வை வெளியேற தடையாக இருக்கும். உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. எனவே அலுவலகத்தில் லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது நல்லது. தொடக்கத்தில் இது கடினமாக இருந்தாலும் பழகினால் சரியகி விடும்.
6.காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள்
சீஸ், பட்டர் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு வேளைகளில் காய்கறி, பழங்களையோ சாலட்டுகளையோ சாப்பிடுவது நல்லது.
7. வறுத்த, பொரித்த உணவு வேண்டாம்
சிக்கன் 65, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகள்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம்.
8. தண்ணீர் அவசியம்:
உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. எனவே தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்.
9.நிறைவான தூக்கம் தேவை:
எட்டு மணி நேர தூக்கம் அத்தியாவசியமானது. அதிலும் பெண்களுக்கு 8-10 மணிநேரம் வரை தூக்கம் கண்டிப்பாகத் தேவை. அமைதியான தூக்கம் இல்லையென்றால் கடும் சோர்வு ஏற்படும். வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டு வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
10. சீரான நடைபயிற்சி
காலை எழுந்ததும் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் ஏழு முதல் பத்து நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம்.